சனி, மே 28, 2011

இந்த வருட IPL T20 யிலும் சென்னையே வெற்றி பெரும் - ஒரு பார்வை


                                                                  

கடந்த நான்கு வருடங்களாக நடை பெற்றுவரும் இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான IPL -ல்  இந்த வருடமும்  வெற்றி பெரும் வாய்ப்பு  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே  பெருமளவில் உள்ளது. இதை நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை மாறாக ஒவ்வொரு அணியின் குறை நிறைகளை அலசியே சொல்கிறேன்.

நடந்து முடிந்த எல்லா IPL போட்டிகளிலும் அரை இறுதி சுற்றை அடைந்த ஒரே அணி சென்னை தான். வெற்றி நிலவரங்கள்.

2008 - இறுதிச் சுற்றில் தோல்வி. 3  விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

2009 - அரை இறுதிச் சுற்றில் தோல்வி. 6  விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2010 - கோப்பையை கைப்பற்றி சாம்பியன். எதிர்த்து ஆடியது மும்பை இந்தியன்ஸ், 22  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

2010 - சாம்பியன்ஸ் கோப்பையில் முதல் முறையாக பங்கு பெற்று கோப்பையை வென்றது.

2011 - இறுதி போட்டிக்கு தகுதி. எதிர்த்து விளையாடப் போவது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.




பேட்டிங் வரிசை:                                                      
 
எப்படி இந்த வெற்றிகள் சென்னைக்கு சாத்தியமாகின?  நிச்சயமாக அதன் மிக வலுவான பேட்டிங் வரிசை தான் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாகும். கடந்த எல்லா IPL போட்டிகளின் போதும் இக்கட்டான தருணங்களில் மிகச் சிறப்பாக விளையாடியே இந்த வெற்றிகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருவரே இருப்பார்(கைல், பொல்லார்ட், யூசுப் பதான் போன்றோர்). இந்த இடத்தில் தான் சென்னை அணி மற்ற அணிகளுடன் வேறு படுகிறது. ஆம், சென்னை அணியில் சுரேஷ் ரைனா, டோனி மற்றும் அல்பி மோர்கல் என்ற 3 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை கரை சேர்த்து விடுகிறார்.


                                                                  

பந்து வீச்சு:

 போல்லின்ஜர் என்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் அணியில் இணையும் வரை சென்னை பந்து வீச்சு பரிதாபகரமான நிலையிலே இருந்தது. அவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்தவுடன் பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நல்ல நிலையை அணி அடைந்தது. போல்லிஞ்சரின் பந்து மற்ற பந்து வீச்சாளர்களை ஒப்பிடுகையில் சற்று மேல் எழும்பி செல்கிறது, அதனால் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறிது தடுமாறி விடுகிறார்கள். நம்மவர்கள் எப்பொழுதுமே BOUNCER பந்துகள் என்றால் கொஞ்சம் அலறுவார்கள். சுழல் பந்து வீச்சில் சென்னை பையன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். ஆகா மொத்தத்தில் பந்து வீச்சும்  மோசம் என்று சொல்லி விட முடியாது.

 இந்த நிலையில் அணித் தலைவர்   டோனியின் அணுகு முறையும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். மற்ற அணித்தலைவர்கள் போல் பொறுப்புகளை மற்றவர்களிடம் தள்ளாமல் இவர் தன் தோளில் சுமக்கிறார். இது தான் இவருடைய வெற்றியின் ரகசியம் ஆகும். இந்த அணுகு முறை நிச்சயம் சென்னைக்கு அனுகூலம் ஆகும்.

 இறுதிப் போட்டி:

 இன்று நடக்கும் இறுதிப் போட்டியை பொறுத்த வரையில் Gayle லை 35 ரன்னுக்குள் அவுட் செய்து விட்டால் வெற்றி சென்னைக்கே. இவர் ஒருவர் தான் சென்னைக்கு பெரிய சவால். இந்த சவாலில் வென்று  விட்டால் கோப்பை சென்னைக்கே. அதேபோல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வருடம் சென்னையில் நடந்த எந்த போட்டியிலும் சென்னை அணி தோற்க்கவில்லை என்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும்  அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.

டாஸ் வென்றால் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும். சென்னை மைதானம் நேரம் செல்லச் செல்ல சிறிது SLOW  ஆகிவிடும். நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த தவறை சென்னை செய்து விடக்கூடாது.

 ஆகா மொத்தம் இன்றைய போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.


வெள்ளி, மே 27, 2011

செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு ஷொட்டு.... ஒரு குட்டு...


ஷொட்டு - சட்ட மேல்சபை

                                                                        
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இனி தமிழகத்தில் மேல்சபை வராது என்று அறிவித்து உள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே இந்த முடிவு தெரிகிறது. எதுக்கு சட்ட மேல்சபை? அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையில் பேசமுடியாத எந்த விஷயத்தை மேல் சபையில் பேசிவிடப் போகிறார்கள்?

யாருக்கேனும் பதவி கொடுக்காவிட்டால் அல்லது கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு தன் இதயத்தில் இடம் உண்டு என்று கூறுவார் கலைஞர். இதயத்தில் கொடுத்த இடத்தால் சமாதானம் ஆகாதவர்களுக்கு பதவி கொடுக்கவே சட்ட மேல்சபை பயன்படும். மற்றபடி அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

இப்பொழுது இருக்கும் ஒவ்வொரு MLA க்களுக்கும் மாத சம்பளமாக ருபாய்      45 ,000 , படி, பாதுகாப்பு செலவு மற்றும் இத்யாதி இத்யாதி என்று ஒரு மாதத்திற்கும் ஆகும் செலவே லட்சத்தை தொடும். அப்படி இருந்தும் அவர்களில் பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க. இந்த நிலையில் சட்ட மேல் சபையை கொண்டு வந்து அவர்களுக்கும் தெண்டமாக செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. உள்ளவங்க சட்டசபையில் கிழித்தால் போதும், புதுசா யாரும் வந்து ஒன்னும் செய்யவேண்டியது இல்லை.

முதல்வரே, ரொம்ப நல்ல காரியம் செஞ்சு இருக்கீங்க.உங்களின் இந்த நல்ல முடிவை கை தட்டி ஆராவரித்து வரவேற்கிறோம்.

குட்டு - சமச்சீர் கல்வி

                                                           
முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க. கிராமப்புற மாணவர்களுக்கும் நகரத்து மாணவர்களுக்கும் கல்வித் தரத்தில் பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பது காலம் காலமாக தமிழகத்தில் இருந்து வரும் பிரச்சனை.  அந்த பிரச்சனையை தீர்க்க சமச்சீர் கல்வி தான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை களைவதற்கான முதல் படி சமச்சீர் கல்வி அல்லவா? முதல் முயற்சியே தடை படலாமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாடறிந்த முதுமொழி ஆயிற்றே.

ஆகவே முதல்வரே...  பாட திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அறிவு சார்ந்த நடவடிக்கையாக எனக்கு படுகிறது. கலைஞர் தன்னை பற்றி பாடத்திட்டங்களில் சேர்த்து இருந்தால் அந்த பாடத்தை தடை செய்து விடுங்கள், இதில் நாட்டு மக்களாகிய எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.

தன்னுடைய ஆட்சியின் பொது தன்னைப்பற்றியே பெருமையாக மாணவர்கள் படிக்கும் பாடங்களில் சேர்ப்பது என்பது கொஞ்ச நஞ்சம் ஈனம் மானம்  உள்ள மக்கள்கூட செய்ய முடியாத செயல். எப்படிதான் தமிழக அரசியல் வாதிகள் செய்கிறார்களோ???? பொது மேடையிலும், சினிமா நிகழ்சிகளிலும் பெருமை பேசிக் கொள்கிறீர்களே அது போதாதா? மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.

தயவு செய்து சமச்சீர் கல்வி முறையில் உள்ள குறைகளை களைந்து அதை தொடர்வதற்கான முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது என்பது கிராமப் புற தற்போதைய மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் செய்யும் துரோகமே ஆகும். கிராமப் புற ஏழைகளின் வயித்தில் அடித்த எந்த ஆட்சியாளரும்  நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.


சொல்வது எங்கள் தலையாய கடமை... முடிவு உங்களிடம்.


திங்கள், மே 23, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடியலப்பா...



                                                               

போன வெள்ளிக்கிழமை சில பிரபல(???) மற்றும் பிரபலமில்லாத பதிவர்களின் வலைத்தளங்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தேன். சிலருக்கு கமெண்ட்ஸ் சும் போட்டேன். அதில் சிலர் கமெண்ட் தணிக்கை செய்துள்ளார்கள். சரி கொஞ்ச நேரத்தில பாத்துட்டு கமெண்ட்ஸ்ச வெளியிட்டு விடுவார்கள் என்று பார்த்தால் ஞாயிற்று கிழமை வரை வெளியிடவே இல்லை.

அதனால கடுப்பாகி தான் இந்த பதிவை எழுதுகிறேன்...

அய்யா anonymous அப்ரசண்டிகளா, உங்களால் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதால் தான், பதிவர் நண்பர்கள் இது போன்று கமெண்ட்களை மட்டுறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் தைரியமாக சொந்த பேரில் வந்து சொல்ல வேண்டியது தானே? எனக்கு தெரிந்து எல்லாப் பதிவர்களும் மாற்று கருத்தை பிரசுரிக்கவே செய்கிறார்கள். அப்புறம் ஏன் தயங்குகிறீர்கள்?


எங்களுடன் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சண்ட போடுங்க, நாங்க வேணாம்னு சொல்லல, இன்னும் சொல்லப்போன வரவேற்கிறோம், ஆனால் BAD  வோர்ட்ஸ் மட்டும் வேணாம், மம்மி பாவம்.... என்ன டீல் ஓகே யா?(ஆமாம், ஆயிரம் பேர் சொல்லி கேட்காதவர்கள் நான் சொல்லியா கேட்பீர்கள்).
                                                                     
சரி நம்ம பதிவர்கள்கிட்ட வருவோம்....

எல்லா கமெண்ட் MODERATION  வச்சிருக்கவைங்களுக்கும்  ஒன்னு சொல்லிக்கிர்றேன். தினமும் பார்த்து கிளியர் பண்ண முடிஞ்சா வைங்க, இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கி விடுங்கடா...

(மேற்கண்ட வரிகளை மட்டும் கவுண்டமணி பாணியில் படிக்கவும்... தயவு செய்து மரியாதைக் குறைவாக எடுத்துகொள்ளாமல் கவுண்டர் பாணி நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்).

நாங்க போட்ட கமெண்ட்ஸ்ச நாங்க பாக்கவே ரெண்டு மூணு நாலு காத்திருக்கணுமா?
 
கடுப்பேத்துராய்ங்க மை லார்ட்...


சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்




 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.



இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....




வியாழன், மே 19, 2011

அ.தி.மு.க வெற்றிக்கு நானே காரணம் - நடிகர் சிங்கமுத்து பரபர பேட்டி....



சென்ற திங்கட்கிழமை காலையில் எங்கள் அள்ளி விட்டான் கம்பெனி பத்திரிகை அலுவலகத்திற்கு  நடிகர் சிங்கமுத்து போன் செய்து உங்களிடம் சில விசயங்களை பகிர வேண்டுமே, சந்திக்க முடியுமா? என்றார். அதற்க்கு நாங்கள் வேறு நல்ல வேலைகள் பல உள்ளனவே என்றோம். அப்படியா, பரவாயில்லை நானே வருகிறேன் என்று எங்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தே விட்டார். இதோ எங்கள் டுபாக்கூர் நிருபர் அஞ்சும் சிங்கம், அவருடன் கண்ட மினி பேட்டி....

நிருபர் அஞ்சும் சிங்கம் : வணக்கம் சிங்கமுத்து சார், நல்லா இருக்கீங்களா?

சிங்கமுத்து : நல்ல வேலை நீனாவது கேட்டியே தம்பி, நல்லா இருக்கேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : ஏன் சார் இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

சிங்கமுத்து : பின்ன என்னப்பா, தேர்தல் அப்போ வேகாதா வெயில்ல நல்லா வேலை வாங்கினாங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு பய கண்டுக்க மாட்டேங்கிறான்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : பின்ன தேர்தலுக்கு  பிறகு சபாநாயகர் பதவி தருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

சிங்கமுத்து : இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சபாநாயகர் பதவி எல்லாம் தர வேணாம், ஒரு நன்றி சொல்லலாம்ல.

நிருபர் அஞ்சும் சிங்கம் : அதான் அம்மா தேர்தல் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றின்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன, விடுங்கண்ணே.

சிங்கமுத்து : இல்ல... இருந்தாலும் ... வேகாத வெயில்ல வெந்து இருக்கேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சும்மா வேகாத வெயிலு வேகாத வெயிலுன்னுகிட்டு...அப்புறம் மத்தவங்கல்லாம் என்ன வெந்த வெயில்லையா வெந்துகிட்டு இருக்காங்க??? எல்லாருக்கும் வேகாத வெயில்தான்.

சிங்கமுத்து : இப்படி எல்லாம் பேசின, அப்புறம் காத கடிச்சு துப்பிபுடுவேன்... ஆமாம்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சரிண்ணே, ஒரு வேலை அம்மா உங்கள  கூப்பிட்டு அமைச்சர் பதவி தந்தா ஏத்துக்குவீங்களா?

சிங்கமுத்து : என்ன தம்பி இப்படி எக்கு தப்பா கேட்டுட்ட?

நிருபர் அஞ்சும் சிங்கம் : கேட்ட கேள்விக்கு பதில்...ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?

சிங்கமுத்து : அது வந்து...அது வந்து... சொத்து பாதுகாப்பு துறைன்னு ஒன்னு ஆரம்பிச்சு அதுக்கு அமைச்சரா போட்டா ஏத்துக்குவேன் தம்பி.

நிருபர் அஞ்சும் சிங்கம் : சொத்து பாதுகாப்பு துறையா??? அப்படி ஒரு துறை இல்லையே?

சிங்கமுத்து : இருக்குன்னு சொன்னனா...அப்படி ஒரு துறையை ஆரம்பிச்சா இருக்கேன்னு சொன்னேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம்: இந்த துறை தான் வேணும்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா?

சிங்கமுத்து : இல்ல.. வடிவேலு தம்பிக்கு சொத்து வாங்கி குடுத்ததில கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... அனுபவம் உள்ள துறைனா கொஞ்சம் ஈசி தானே.

நிருபர் அஞ்சும் சிங்கம்: எது ஈசி? சொத்த லவட்டுறதா?

சிங்கமுத்து : இப்படி எடக்கு மடக்காவே கேள்வி  கேட்டீன்னா  அப்புறம் கோயில்ல காசு வெட்டி போட்டுருவேன்  ஆமாம்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: சரின்னேன் டென்ஷன் ஆகாதிங்க... உங்களுக்கும் வடிவேலுக்கும் என்னதான் பிரச்சனை?

சிங்கமுத்து: அது ஒன்னும் இல்லப்பா.. அது ஒரு சில்லற  பிரச்சனை... தம்பி நம்மகிட்ட சொத்து வாங்கி கேட்டுச்சு... நானும் வாங்கி  குடுத்தேன் அவ்வளவுதான்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது நல்லா விசயமாச்சே... இதுக்கா அவரு உங்கள இப்படி கரிச்சு கொட்றார்???

சிங்கமுத்து: அதுல ஒரு சின்ன கசமுசா ஆகிருச்சு, வடிவேலு தம்பி குடிகாரர் ஆச்சா அதனால அவரு குடிச்சே சொத்த அழிச்சிருவாறு அப்படிங்கிற நல்ல எண்ணத்தில சொத்து எல்லாத்தையும் என் பேர்லே வாங்கிட்டேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது தான் உங்களுக்கு சில்லற பிரச்சனையா???(அஞ்சும் சிங்கம் சத்தம் இல்லாமல் மனசுக்குள்... 'கொய்யால உன்னை எல்லாம் அடிச்சே சாவடிக்கனும்டா') சரி அண்ணேன் ... அ.தி.மு.க வின் வெற்றில உங்க பங்களிப்பு என்னண்ணே?

சிங்கமுத்து : என்ன தம்பி ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு தெரியலையே?

நிருபர் அஞ்சும் சிங்கம்: என்ன ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு?

சிங்கமுத்து: இல்ல... அ.தி.மு.க ஜெயிச்சதே என்னாலதான்னு... நான் மட்டும் எதிர்ப்பிரச்சாரம் செய்யலைன்னா இந்நேரும் கலைஞர்ல முதல் அமைச்சரா ஆகி இருப்பாரு.

நிருபர் அஞ்சும் சிங்கம்:அண்ணே இத்தோட பேட்டிய முடிச்சுக்குவோம்... நான் புள்ள குட்டிகாரன்... இப்பவே ஆட்டோ வர்ற சத்தம் கேட்குது... என்ன விட்ருங்க நான் ஓடணும்....வேணும்னா நீங்க எங்க ஓனர்கிட்ட  பேட்டிய தொடருங்க....

சிங்கமுத்து: அப்படியா தம்பி.... ரொம்ப சந்தோசம்...உங்க மொதலாளி பேரு என்ன?

நிருபர் அஞ்சும் சிங்கம்:  P .R . K . செமதில்


புதன், மே 18, 2011

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்...




                                                  
                                 பயோ-டேட்டா...


பெயர் : இந்தியக் குடிமகன்

மொழி : 1500  க்கும் மேல்

இனம் : கணக்கில்லை

பிடித்தது     :  சினிமா மற்றும் பேச்சு

பிடிக்காதது :  அடுத்தவர்களின் தவறு

விரும்புவது : ஊழலை ஒழிக்க

விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை

எதிரி : பாகிஸ்தான்

உப எதிரி : சீனா

ஆதர்ச புருசர்கள் : சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக

பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு

வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன

பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்... கிரிக்கெட் ... கிரிக்கெட் மட்டுமே


தவறே செய்யாத நாடு : இந்தியா

தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான்

பலம் : மக்கள் தொகை

பலவீனம் : பலமே பலவீனம்

நம்புவது : ஆட்சியாளர்களை(இன்னுமா நம்புறீங்க???)

சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


திங்கள், மே 16, 2011

பயமாய் இருக்கிறது முதல்வரே ... மீண்டும் ஆரம்பித்து விடுவீர்களோ???




                                                                   

மிகப் பெரும்பான்மை தொகுதிகளை வென்று மீண்டும் தமிழக முதல்வராக வந்ததற்கு உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் . வெற்றிக் களிப்பில்  உள்ளபோதும், சென்ற ஆட்சியை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று நினைத்தால்  உங்களுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

நீங்கள் மாறிவிட்டீர்களா புதிய முதல்வரே? யோசிக்கும் பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்தீர்கள். அந்த பேட்டியை எடுத்தவர் உங்களின்  அடிமைகளில் ஒருவரான  ரபி பெர்னாட் அவர்கள்(மன்னிக்கவும் ரபி பெர்னாட்,  இதைவிட சிறந்த வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை, நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்பொழுது நீங்கள் அ.தி.மு.க வின் மற்றொரு கொ.ப.செ அவ்வளவே). எனக்கு இந்த கணம் வரை பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அந்த பேட்டியில் நீங்கள் சொன்னீர்கள் "இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல மாறாக இது தமிழக மக்களின் வெற்றி" என்று, நிறம்ப சந்தோசமாக இருந்தது அதைக்  கேட்ட பொழுது. ரொம்ப தன்னடக்கத்துடன் இருந்தீர்கள். இனி இப்பொழுதும்  எப்பொழுதும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.


                                                                     




ஆனால் புதிய தலைமைச்செயலக விசயத்தில் உங்களின் அணுகுமுறை அறிவு சார்ந்ததாய் தெரியவில்லை. கருணாநிதி கட்டினார் என்பதைத் தவிர அதை நீங்கள் வெறுக்க என்ன காரணம் இருக்க முடியும்? இந்த புறக்கணிப்பு தேவைதானா? உங்களின் ஈகோ வைக்காட்ட மக்களின் வரிப்பணத்தை தான் வீணடிக்க வேண்டுமா? தயவு செய்து யோசியுங்கள். கருணாநிதி செய்த எதுவும் வேண்டாம் என்றால் அவர் வகித்த முதல்வர் பதவியும் வேண்டாம் என்று சொல்வீர்களா???

எனக்கு பயமாய் இருக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மிக அழகிய முறையில் கட்டி அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளார் கருணாநிதி. அவரை எதிர்க்கும் குணத்தால் தயவு செய்து அதற்க்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். முடிந்தால் அதற்க்கு இன்னும் மெருகூட்டி உங்கள் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொள்ளுங்கள். அதே போல் சென்ற ஆட்சியின் நல்ல திட்டங்கள் அனைத்தையும் தொடருங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது.

நிறைய புதுமை செய்வேன் என்று வாக்களித்து உள்ளீர்கள். நன்றாக செய்யுங்கள், உங்களை பாராட்ட காத்திருக்கிறோம். ஆனால் மனம் போன போக்கில் நடந்தால் எதிர்ப்பை காட்டவும் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

வெற்றிக்குப் பிறகு உங்களிடம் அமைதி தெரிகிறது. அது எங்களுக்கு சந்தோசச் செய்தி. ஆனால் தலைமைச் செயலக விஷயத்தால் எங்களுக்கு ஒரு பயம் வருகிறது. அது உங்களுக்கு கெட்ட செய்தி.

உங்களை கணிக்க முடியவில்லை... மீண்டும் மாறிவிடுவீர்களோ ? பயமாய் இருக்கிறது.
     
                                                   


சனி, மே 14, 2011

கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


                                                                      

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். தோல்விக்கான காரணங்கள் என்ற பெயரில் உங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பீர்கள்.

ஆனால் நான் உங்களை காயப்படுத்தப்போவதில்லை... உங்களுக்கு பல விதங்களில் நன்றி சொல்ல தமிழக மக்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

1 . ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு குடுத்ததற்க்காக, நிச்சயமாக இது ஏழைகளுக்கு உதவிய நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

2 . மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், 108  இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்க்காக நன்றி.

3. இலவச காப்பீடு  திட்டத்தை 
செயல்படுத்தியதற்க்காக. நிச்சயமாக பல ஏழைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது உண்மை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

4 . குக்கிராமங்களில் கூட ஓரளவு சாலை வசதி செய்து தந்ததற்கு நன்றி.

5 . வாக்களித்தபடி பெரும்பாலோருக்கு வண்ணத் தொலைக்காட்சி தந்ததற்கு நன்றி.

6 . சென்னையில் பல மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்ததற்கு நன்றி.

7 . மின் அலுவலக நடவடிக்கைகளை முறைப்படுத்தியதற்க்காக. மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்தது என்னவோ உண்மை, ஆனால்  சென்னையில் எந்த நேரம் போன் செய்தாலும் மின் அலுவலகங்களில் எடுத்து முறையான பதில் தந்தார்கள். அதற்க்காக நன்றி.

8 . ரேஷன் அலுவலகங்களில் கையூட்டு வாங்காமல் தேவையான மாற்றங்களை செய்து தந்தார்கள். அதற்க்காக நன்றி.

9 . மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கியதற்க்கு நன்றி.

10 . சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி.

மேலும் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியதற்க்காக நன்றி.

இவ்வளவு செய்தும் ஏன் தோல்வி அடைந்தோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களை களைய உடனடி நடவைக்கை எடுங்கள். எடுத்தால்... நிச்சயம் அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும்.





                                                           
                                              

1 . குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப் படுத்துங்கள்.

2 . திரைத்துறையில், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தினரை விலகச் சொல்லுங்கள் அல்லது அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். சினிமா மக்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து கவனிக்கும் ஊடகம். அதில் உங்கள் குடும்பத்தினரின் கடும் ஆதிக்கம் மக்களிடம் இயல்பான வெறுப்பை சம்பாதித்தது.

3 . ஏன் வியாபாரங்களில் இவ்வளவு போட்டி, யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஏற்கனவே 100  தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. இன்னும் ஏன் இவ்வளவு வெறி பணத்தின் மீது? இங்கு ஒரு தலைமுறையே சாப்பட்டிற்க்கும் சாதாரண வாழ்க்கைக்கும் போராடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 . நீங்கள் குடும்பத்தினரை சமாளிப்பதிலே அல்லது காப்பாற்றுவதில் போராடிக்கொண்டு இருக்கையில், பாரபட்சம் இல்லாமல் எல்லா அமைச்சர்களும்,       MLA-க்களும் புகுந்து விளையாடி விட்டார்கள். யாருக்கும் 10  கோடிக்கு கம்மி சொத்து இல்லை.

5 . இவை அனைத்தையும் மக்களுக்கு காசு கொடுத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தீர்கள். மக்களை காசு குடுத்து விளக்கி வாங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறைகளை சரி செய்தால் நிச்சயம் மீண்டும்  ஆட்சியை தி.மு.க வெல்லும். 


நம்பிக்கையோடு இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள். சிறந்த இரண்டாவது எதிர்க்கட்சியாக ஜனநாயக் கடமையை ஆற்றுங்கள்.
மக்கள் நன்மதிப்பை மீட்டெடுக்க போராடுங்கள்.

மற்றபடி, உங்களுக்கு.... மீண்டும் நன்றி....மிக்க நன்றி....


வியாழன், மே 12, 2011

கலைஞரின் ஆட்சியா? ஜெயின் ஆட்சியா? முடிவுசெய்யப்போகும் அரசரின் ராசி...



இதோ..இதோ... வந்தே விட்டது நாம் நீண்ட நாட்களாக காத்திருந்த தேர்தல் முடிவிற்கான நாள். கடந்த இரண்டு மாதங்களாக எத்தனையோ கருத்து கணிப்புகள் பத்திரிகைகளாலும் தொலைக்காட்சி உட்பட்ட மற்ற ஊடகங்களாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேவை இல்லாமல் ஊர் ஊராக சென்று வேகாத வெயிலில் வெந்து அல்லது கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு கணிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள், ஆட்சி யாருக்கு என்று தெரிந்து கொள்வதற்கு மிகச் சுலபமான ஒரு வழி இருப்பது தெரியாமலே.


ஆம் நண்பர்களே, மிகச் சுலபமாக, யாருடைய ஆட்சி அமையும் என்பதை கணித்துவிடலாம். அதற்காக நீங்கள் தமிழகத்தின் 234  தொகுதிகளுக்கும் சென்று கருத்துக்கணிப்பு நடத்த வேண்டியது இல்லை. ஒரே ஒரே தொகுதிக்கு சென்று கருத்தை கணித்தால் போதும்.

அந்த பெருமைக்கு உரிய தொகுதி....



புதுக்கோட்டை மாவட்டத்திலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் வரும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.

அது எப்படி, ஒரே ஒரு தொகுதியை வைத்து ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்வது? அங்கதான் இருக்கு ஒரு கணக்கு.. அந்த கணக்கு தான் என்ன???  இதோ விடை.....



1989-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர்.  மறைவிற்கு  பின்  நடந்த தேர்தலில்  திருநாவுக்கரசர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவின் அணியில்  இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் அடைந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறாக கலைஞர் ஆட்சி அமைத்தார்.



வருடம் 1991 , ஜெயலலிதாவின் மீது கொண்ட அதிருப்தியில் திருநாவுக்கரசர் அண்ணா புரட்சித்தலைவர்  தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கி  அந்த தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தார், அனால் ஆட்சி அமைத்தது செல்வி ஜெயலலிதா அவர்கள், கலைஞர் ஆட்சியை இழந்தார்.

வருடம் 1996 , திருநாவுக்கரசர்  மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அபார வெற்றி அடைந்தார். ஆனால் செல்வி ஜெயலலிதா ஆட்சியை இழந்தார், கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

வருடம் 2001, இந்த முறை திருநாவக்கரசர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து கலைஞருடன் கூட்டணி அமைத்தார். தனது கட்சி சார்பாக அறந்தாங்கி தொகுதியில் அரசன் என்ற தனது நண்பரை நிறுத்தினார். என்ன ஒரு விநோதம் பாருங்கள், இந்த முறை அரசன் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால்...ஆனால்...ஆனால்... ஆமாங்க அதேதான்... கலைஞர் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார், ஜெயலலிதா அரியணை ஏறினார். 

அதன் பின் அரசர் நாடாளுமன்ற தேர்தல்கள் பக்கம் சென்றுவிட்டார், அதனால் தான் 2001  க்கு பின் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை, நண்பர்கள் மன்னிக்கவும்.

இதிலிருந்து என்ன தெரியுது??? எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தாலும்  அவர் சார்ந்த கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதே.

என்ன அரசியல் வித்தகர்களே கணக்கு சரி தானே????

பார்ப்போம் இந்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்று....

டிஸ்கி-1 : ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இது ஒரு ஒப்பீடு அவ்வளவே.




சனி, மே 07, 2011

தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன உத்தமபுத்திரர்களா?




இன்று யாரிடம் போய் தேர்தல் பற்றி பேசினாலும் ஒருவித சலிப்பைக் காணலாம். எங்கங்க எல்லாம் திருட்டுபயல்களா இருக்காங்க, இந்த நிலைமைல யாருக்கு ஓட்டுபோட்டு என்னத்த பண்றதுன்னு.

நிஜமாவே எல்லாருமே திருடர்கள்தானா? ஊழல்வாதிகல்தானா? என்று கட்சி வாரியாக யோசித்தபோது, தூய்மையானவர்கள் என்று எந்த கட்சியிலும் ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை. சரி ரொம்ப வருடங்களா முன்னேற்றமே இல்லாம இருக்கிற கம்யுனிஸ்ட்டுகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது, ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது.

ஆம், என்னுடைய நினைவிற்கு 3 பெயர்கள் வருகிறது.

நல்லகண்ணு
பாலபாரதி
நன்மாறன்

ஏழ்மையான நிலையில்கூட கட்சி தனக்காக வசூல் செய்து குடுத்த 1 கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி குடுத்த பெருந்தன்மை தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. MLA வாக இருந்தும் அரசு பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழத்தெரியாத,குடிசை வீட்டில் வாழ்ந்த நேர்மை நன்மாரனிடம் இருந்தது. போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சொத்துகணக்கை கூட்டி காட்டும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் மத்தியில் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் சொத்து கணக்கு குறைந்த நிலையில் பாலபாரதி இருக்கிறார்.

தமிழக கம்யூனிஸ்டுகள் அனைவருமே நல்லவர்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் உத்தமபுத்திரர்களாகவே இருக்கிறார்கள்.

ஊழலை இந்த அளவு எதிர்க்கும் மக்கள் நியாயமாக கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?

செவ்வாய், மே 03, 2011

லோக்பால் மசோதாவாவது... வெங்காயமாவது...


இன்றைக்கு நாடெங்கும் நடக்கும் ஒரே விவாதம், லோக்பால் மசோதா. இதில என்ன கொடுமைன்னா முக்கால்வாசி பேருக்கு இதோட முழு விவரம் தெரியாது(எனக்கும் தான்). ஆனா இந்த மசோதா வந்தவுடனே அதன்பிறகு இந்தியாவில ஊழலே நடக்க போறது இல்லைங்கற மாதிரியும், எல்லா ஊழல் பெருச்சாளிகளும் நல்லவங்களா மாற்றப்படுவாங்கன்கிற மாதிரியும் பேசிகிட்டு திரியிறோம்.

ஊழல ஒழிக்க குறைந்த பட்சம் சில அடிப்படை விஷயங்களையாவது நாம சரி செய்யணும். அத விட்டுட்டு இண்டர்நெட்ல, ட்விட்டர்ல, SMS ல வோட்டு போட்டெல்லாம் இந்தியாவ்ல ஊழல ஒழிக்க முடியாது. இந்த உண்மைய மொதல்ல நாம புரிஞ்சிக்கணும்.நம்ம நாட்ல ஊழல் ஒன்னும் ஆரம்ப கட்டத்தில இல்ல, கடைசி கட்டத்தில இருக்கு. இதுக்கு மேல இனிமே எவன்னாளுயும் ஊழல் பண்ணமுடியாது.உலகத் தலைவர்கள்லாம் நம்மாளுகள பார்த்து வாய் அடச்சிப்போய் இருக்கானுங்க. அட ஆமாங்க, ஊழல்ல நாம வல்லரசாகி பல வருசங்கள் ஆச்சு.

சரி ஊழல ஒழிக்க என்ன வழி இருக்குன்னு யோசிச்சா, என்னோட அறிவுக்கு 3 வழி தென்பட்டுச்சு.

ஒன்று... தனி மனித மன மாற்றம், ஆம் நாமெல்லாம் இனி லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சத்த ஒழிக்க பிரச்சாரம் செய்வேன் போரடுவேன்னுஉறுதி மொழி எடுக்கணும்.

இரண்டு.... நீதித் துறை, அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை இந்த மூன்றிலும் களையெடுப்பு நடத்தனும்...

மூன்று.... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் சாதி, மதம் மற்றும் மொழி போன்ற காரணிகளை பார்க்காமல், நேர்மை மற்றும் தூய்மை இவை இரண்டை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனது வேட்பாளரை தேர்வு செய்து , நல்லவர்கள் நாடால வரணும்.

இந்த மாற்றங்கல்லாம் வர நாட்டின் பெரும்பன்மயானவர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்றனும். அப்ப தான் சாத்தியம். களப்பணி ஆற்றுவார்களா? நம்மாளுக டீ தான் ஆத்துவாங்க.

இதை எல்லாம் நாம் செய்யாதவரை நமது அரசியல் வாதிகளுக்கு...
லோக்பாலும்... அமலாபாலும்(நடிகை) ஒண்ணுதான். இரண்டாலும் நாட்டுக்கு எந்த பிரோஜனமும் இல்லை.
அதனாலதான் மீண்டும் சொல்றேன்...
லோக்பாலாவது வெங்காயமாவது.....

டிஸ்கி-1 : அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த அன்று சென்னைல உண்ணாவிரதம் இருந்தவங்க மொத்தம் 20 பேர்கள் தான். அதிலயும் கடைசி வரை இருந்தது 8 பேர் தான். நம்ம போராட்ட குணத்தோட லட்சணம் இது தான்.

டிஸ்கி-2 : உண்ணாவிரத எண்ணிக்கை பற்றி தகவல் தந்த நண்பர் K .R .P செந்திலுக்கு நன்றி.



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters