பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 04, 2013

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

எனக்கு நன்கு தெரியும்... இந்த மருத்துமனையிலிருந்து உயிரோடு நான் திரும்பி வந்தாலும் என்னுடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர  முடியாது என்று... என் இளமை கால வசந்தம் அன்றிரவுடன்  முடிந்துவிட்டதை தெரிந்தே வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கை முடக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை!

அந்த கொடிய இரவை நினைத்து பல வருடங்கள் எனக்கு தூக்கம் வராது. இனி இரவுகளை பார்க்கும் நேரமெல்லாம் அந்த கொடிய விஷயமே என் நினைவில் வந்து நிற்கும்!  ஆண்களை கண்டால் என்னை அறியாமல் என்னுடல் அலர்ஜியால் துடிதுடிக்கும்! இத்தனைக்கும் ஏன்?....  என்  தந்தையோ சகோதரனோ  மீதும் வெறுப்பு கலந்த சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்!  என் சக தோழிகளை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் முட்டும், என்னை பரிதாபமாக பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் மரணமே என் பக்கம் வந்ததுபோல் உணர்வு வரும். என் கனவுகள் ஆறு பேரால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும் இது தான் என் நிலை!

லேசான எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்தாலும்  அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கும்.  சாதாரண மாத்திரைகளுமே பக்கவிளைவை ஏற்படுத்தும் எனும் போது  என் உச்சந்தலை முதல் கருப்பை வரை  தாக்கப்பட்ட வலி ஆறு மாதத்திற்குள் நின்றுவிடாது என்பதை  உங்களால் உணர முடிகிறதா? நிச்சயம் எனக்கு தெரியும்...   இனி வீல் சேரும், சிறிய அறையுமே என் தோழி.. என் சுயதேவைகள் அனைத்தும் இனி என் அன்னையின் உதவியால் மட்டுமே முடியும்... சாகும் வரை இந்த வேதனைகளும் வலிகளும் சுமக்க போவது நான் மட்டுமே...

எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின்  விடுதலை எதிர்நோக்கி!

ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டால்....

பரிதாபம் கொண்டு இந்த மருத்துவச்செலவை ஏற்கிறது அரசு... மருத்துவமனை விட்டு நான் சென்ற பின்??? ஊடகங்களும் போராட்டக்காரர்களும் அடங்கிய பின்?
ஆனால்,
என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த விஷ ஜந்துக்களுக்கு இன்றும் என்றும் ஆயுள்தண்டனை என்ற பெயரில் அரசின் செலவில் இனிதாய் வாழ்க்கை கழிக்கும்! நிச்சயமாய் சில நாட்கள் குற்ற உணர்வு அவர்களை தொற்றிக்கொள்ளும்... ஆனால் நிரந்தரமல்ல... என் அவலநிலை மட்டும் நான் சாகும் வரை நிரந்தரமே...


இரக்கமற்றவர்களின் இருப்பு கம்பி அடியால் தலையில் பலத்த அடி வாங்கிய போதும், என்னை  காப்பாற்ற அந்த ஆறுபேருடன் போராடி தோற்ற போதும்,   கொசு கடிபட்டாலே பதறிப்போகும் போகும் என் மெல்லிய  தோல், வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்   பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உராய்வு ஏற்பட்டு ரத்தத்தால் சிவப்புச்சாயம்  பூசப்பட்ட போதும்  ,  கூடியவர்களுக்கு முன் நிர்வாணமாய் நான் காட்சியளித்த  போதும்  என் உயிர் என்னுடலில் ஒட்டியிருந்ததற்கும் இல்லை... இல்லை...  வலுகட்டாயமாய் தைரியம் வரவழைத்து உயிரை பிடித்து வைத்திருந்ததற்கும்  ஒரே காரணம் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே! மனதில் இருந்த ஒரே  எண்ணம் இவர்களை  தண்டிக்க வேண்டும் என்பதே! நான் கண் விழித்ததும் எதிர்பார்த்ததும் அதுவே! 

பாறைக்கு கண் இருந்தாலும்  அன்றிரவு என்னை பார்த்து அன்று அழுதிருக்கும்... 

கேட்போரையும்  கதறச்செய்யும் எனக்கிழைக்கப்பட்ட கொடுமை பார்த்த பின்னும் காமவெறியர்களை திருந்த வாய்ப்பு கொடுக்கச்சொல்லும் சமூகம்... சிரிப்பு மட்டுமே வருகிறதெனக்கு...

 எறும்புகடித்தால் அதை நசுக்கி கொல்லாமல், கையை விட்டு மெல்லமாய் அப்புறப்படுத்துகிறதா   அவர்களின்  பகுத்தறிவு ? 

 வீட்டில் பாம்பு நுழைந்தால் அதை அடிக்காமல் ,  இரக்கப்பட்டு , மன்னித்து, மெல்லமாய்  எடுத்து வெளியே அனுப்பிவிடுகிறதா அவர்களின் மனிதாபிமானம்?

ஆம் எனில், நானும் அவர்களுடன் கைகோர்க்கிறேன்... ஹா..ஹா..ஹா... சிறுகடிக்கே அறிவற்ற உயிரியை கொல்லதுணியும் நாம், நல்ல மனநிலையில்,  வேண்டுமென்றே ஒரு பெண்ணை சித்ரவதை  செய்த கேடுகெட்டவர்களை மன்னித்துவிடவேண்டுமா? தாராளமாக மன்னிக்கட்டும்..... அவர்கள்  வீட்டு பெண்ணுக்கு இந்த அலங்கோல நிலை ஏற்படும்போது!
 
மன்னிப்பார்கள் எனில் ...
அவர்களும்  திருந்தக்கூடும் எனில் ... 
அவர்களை திருத்தியதால் அனைத்தும் சரியாகிவிட்டதா?  இனி உருவாகிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் காமவெறியர்களை  எப்படி திருத்தப்போகிறார்கள்... "தைரியமா கற்பழி! மனிதாபிமானம் கொண்ட சட்டம் உன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் "  என்றா???   


கேட்டுக்கொள்ளுங்கள்.... அந்த ஆறு பேரை விடவும் கேவலமானவர்கள் இவர்களே...!!!
குறித்துக் கொள்ளுங்கள்... எனக்கு நடந்தது போல் இனி நடக்கபோகும் அனைத்து கொடிய நிகழ்வுக்கும்  பொறுப்புத்தாரி  இவர்கள் மட்டுமே!
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... இல்லையேல் நாளை உங்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இதே நிலையே!!!!


என் விதியை நிச்சயம் மாற்றியமைக்க முடியாது... ஆனாலும் மற்ற பெண்கள் இந்நிலையை அடையாதிருக்க, சிறந்த வழியை என்னை பார்த்த பின்பாவது ஏற்படுத்திகொடுக்கட்டும் இவ்வரசு! ஆணாதிக்கத்தை தீயிழிட்டு பொசுக்க இன்றேனும் சந்தர்ப்பத்தை உருவாக்கட்டும் இவ்வரசு!



*********************

ஆக்கம் - ஆமினா முஹம்மத்


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஈழ பதிவர்களாம், தமிழ் பதிவர்களாம்...என்ன பிரிவினை இது?

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பதிவுலகில் சமீபத்தில் நடக்கும் சில சங்கடங்கள் வருத்தத்தை தருவதால், எங்கள் நிலையை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

சில ஈழ பதிவர்கள் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. அதற்காகவே தற்போது அவர்களிடம் இருந்து விலகி இருக்கின்றோம். அதே நேரம், இந்த வருத்தத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்பது மாதிரியான எண்ணம் எழுந்தால் அது தவறானது (சகோதரர் நிரூபன் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு சில முஸ்லிம்கள் ஆதரவு வோட் போட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். அதுபோல தமிழக நண்பர்களை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளில் எந்த முஸ்லிமாவது ஆதரவு கொடுத்திருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்).

"...எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை அறிந்தவனாக இருக்கின்றான்" - குர்ஆன் 5:8

இறைவனின் இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தே இருக்கின்றோம். ஒருவர் மீது நாங்கள் கொண்டுள்ள வருத்தம், நியாயம் அநியாயம் பார்க்காமல் அவருக்கு எதிராக செயல்பட வைக்குமானால் நாங்கள் முஸ்லிம்களே இல்லை.

ஈழ, முஸ்லிம் பதிவர்கள் இடையிலான பிரச்சனை துரதிஷ்டவசமானது. இந்த பிரச்சனையில் எங்களுக்கு உதவ இங்குள்ள தமிழ் பதிவர்கள் வரவில்லை என்ற கருத்தையும் காண நேர்ந்தது. இதுப்போன்ற கருத்துக்கள் வருத்தமளிக்க கூடியவை. இங்குள்ள பல பதிவர்களுடன் அழகான நட்பு எங்களுக்கு இருக்கின்றது. பல விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவியும் கொள்கின்றோம். அப்படியான நிலையில் அவர்கள் மீது வருத்தம் கொள்ள ஒன்றுமில்லை. அவர்கள் நிலையில் இருந்து இதனை அணுகவே விரும்புகின்றோம்.

உலகில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகளே. இதில் ஈழ, தமிழர் என்று பிரித்து பார்க்க ஒன்றுமில்லை. பிரச்சனை ரீதியான கருத்துவேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, பகுதி வாரியான கருத்துவேறுபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈழ, தமிழர் என்று பிரிவினை பேசுவதெல்லாம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிராவை. இஸ்லாமிற்கு நேரடியாக பங்கம் விளைவிக்க கூடிய இந்த விசயத்தில் முஸ்லிம்கள் எவ்வித ஆதரவும் தர இயலாது.

பதிவுலக சகோதரர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், தயவுக்கூர்ந்து உங்கள் வேறுபாடுகளை களைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை வளர்க்கும் விதமாக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாடி பதிவிடுவதை நிறுத்துங்கள். ஒருவருக்கு சிறிதளவு கூட சங்கடம் தரும் விதமாக, உணர்வுகளை தூண்டும் விதமாக பதிவிட வேண்டாம். சிலபல காலம் இதுக்குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்துக்கொள்ளுங்கள். நேர இடைவெளி நிச்சயம் ஒரு அழகான புரிதலை தரலாம் (இறைவன் நாடினால்).

இதுப்போன்ற துரதிஷ்டவசமான நிலையிலிருந்து பதிவுலகம் வெளியில் வந்து ஆரோக்கியமான வகையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

--- சிராஜ் & ஆஷிக் அஹமத்
நன்றி: முஸ்லிம் பதிவர்கள்.     


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters