35 வது சென்னை புத்தகக் கண்காட்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையும் ஆரம்பித்து விட்டதால் இந்த நான்கு நாட்களும் நிச்சயம் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் சென்ற வாரம் நான் வெளியிட்ட இந்த டிப்ஸ் பதிவை மீண்டும் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதோ எனது திருத்தப்பட்ட மீள் பதிவு....
ஒவ்வொரு வருடமும் நான் சென்னையில் இருக்கும் பொழுதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வகையில் நான் கற்றுக்கொண்ட சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே...
1 . கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும்.
2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.
3 . இந்த 4 நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள்.
4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.
5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.
6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.
7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.
8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.
9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.
10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர், அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.
12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.
13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே இருப்பார்.
14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமா இருக்கும் பராமரிப்பு.
15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.
நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்.... எவ்வளுவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது.... நாமும் பழி தீர்ப்போம்...
டிஸ்கி-1 : நானும் ரஹீம் கஸாலியும் நேற்று சென்று இருந்தோம், நோட்புக் எடுத்துச் செல்ல மறந்து விட்டோம். கல்கியின் பொன்னியின் செல்வன் புக் ஒரு கடையில் மிகக் குறைவான விலையில் கொடுத்தார்கள், அந்த கடை எண்-னை மறந்துவிட்டோம், சிறிது நேரம் கழித்து எவ்வளவோ முயன்றும் அந்த கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
| Tweet |





