கடந்த நான்கு வருடங்களாக நடை பெற்றுவரும் இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான IPL -ல் இந்த வருடமும் வெற்றி பெரும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே பெருமளவில் உள்ளது. இதை நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை மாறாக ஒவ்வொரு அணியின் குறை நிறைகளை அலசியே சொல்கிறேன்.
நடந்து முடிந்த எல்லா IPL போட்டிகளிலும் அரை இறுதி சுற்றை அடைந்த ஒரே அணி சென்னை தான். வெற்றி நிலவரங்கள்.
2008 - இறுதிச் சுற்றில் தோல்வி. 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
2009 - அரை இறுதிச் சுற்றில் தோல்வி. 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2010 - கோப்பையை கைப்பற்றி சாம்பியன். எதிர்த்து ஆடியது மும்பை இந்தியன்ஸ், 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2010 - சாம்பியன்ஸ் கோப்பையில் முதல் முறையாக பங்கு பெற்று கோப்பையை வென்றது.
2011 - இறுதி போட்டிக்கு தகுதி. எதிர்த்து விளையாடப் போவது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
பேட்டிங் வரிசை:
எப்படி இந்த வெற்றிகள் சென்னைக்கு சாத்தியமாகின? நிச்சயமாக அதன் மிக வலுவான பேட்டிங் வரிசை தான் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாகும். கடந்த எல்லா IPL போட்டிகளின் போதும் இக்கட்டான தருணங்களில் மிகச் சிறப்பாக விளையாடியே இந்த வெற்றிகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருவரே இருப்பார்(கைல், பொல்லார்ட், யூசுப் பதான் போன்றோர்). இந்த இடத்தில் தான் சென்னை அணி மற்ற அணிகளுடன் வேறு படுகிறது. ஆம், சென்னை அணியில் சுரேஷ் ரைனா, டோனி மற்றும் அல்பி மோர்கல் என்ற 3 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை கரை சேர்த்து விடுகிறார்.
பந்து வீச்சு:
போல்லின்ஜர் என்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் அணியில் இணையும் வரை சென்னை பந்து வீச்சு பரிதாபகரமான நிலையிலே இருந்தது. அவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்தவுடன் பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நல்ல நிலையை அணி அடைந்தது. போல்லிஞ்சரின் பந்து மற்ற பந்து வீச்சாளர்களை ஒப்பிடுகையில் சற்று மேல் எழும்பி செல்கிறது, அதனால் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறிது தடுமாறி விடுகிறார்கள். நம்மவர்கள் எப்பொழுதுமே BOUNCER பந்துகள் என்றால் கொஞ்சம் அலறுவார்கள். சுழல் பந்து வீச்சில் சென்னை பையன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். ஆகா மொத்தத்தில் பந்து வீச்சும் மோசம் என்று சொல்லி விட முடியாது.
இந்த நிலையில் அணித் தலைவர் டோனியின் அணுகு முறையும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். மற்ற அணித்தலைவர்கள் போல் பொறுப்புகளை மற்றவர்களிடம் தள்ளாமல் இவர் தன் தோளில் சுமக்கிறார். இது தான் இவருடைய வெற்றியின் ரகசியம் ஆகும். இந்த அணுகு முறை நிச்சயம் சென்னைக்கு அனுகூலம் ஆகும்.
இறுதிப் போட்டி:
இன்று நடக்கும் இறுதிப் போட்டியை பொறுத்த வரையில் Gayle லை 35 ரன்னுக்குள் அவுட் செய்து விட்டால் வெற்றி சென்னைக்கே. இவர் ஒருவர் தான் சென்னைக்கு பெரிய சவால். இந்த சவாலில் வென்று விட்டால் கோப்பை சென்னைக்கே. அதேபோல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வருடம் சென்னையில் நடந்த எந்த போட்டியிலும் சென்னை அணி தோற்க்கவில்லை என்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.
டாஸ் வென்றால் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும். சென்னை மைதானம் நேரம் செல்லச் செல்ல சிறிது SLOW ஆகிவிடும். நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த தவறை சென்னை செய்து விடக்கூடாது.
ஆகா மொத்தம் இன்றைய போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.
Tweet |