குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////
இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....
நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.
நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால், அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....
நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....
இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில் லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?
அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.
உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?
வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.
ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள் என்றும், ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.
Tweet |